தனக்கு நிகர் வேறு யாரும் மொழி உணர்வாளர் இல்லை என்று நினைக்கும் ஒரு அறிவாளித் தமிழர் நம்மிடம் கேள்வி கேட்டுள்ளார்.
//தமிழை மட்டும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த தமிழ் அமைப்புகளுக்கு குறைந்த அளவு பொதுபுத்தி கூட இல்லை. எல்லா மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று தானே தமிழர்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? அதை விடுத்து ஒரே ஒரு மொழி மட்டும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நியாயம் தானா ? //
இவருக்கு நம் பதில்.
இவருக்கு குறைந்த அளவு அரசியல் அறிவு இல்லை என்பதே உண்மை. இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்கள் அளவு எந்த மாநிலமும் போராடவில்லை. தமிழகம் இந்தியை எதிர்த்து போல் எந்த மாநிலமும் எதிர்க்கவும் இல்லை. இன்னும் பல மாநிலங்கள் தங்கள் மேல் திணிப்பு உள்ளது என உணரக் கூட இல்லை. பல மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டும் விட்டனர். இந்தி எதிர்ப்பு பலமாக உயிர்ப்புடன் இருப்பது தமிழகம் மட்டுமே. இந்த நிலையில் நம் பக்க நியாயத்தை புரிய வைக்கவும் , நம் மீது ஏவப்பட்டுள்ள இந்தித் திணிப்பையும் தமிழ் மக்களுக்கு புரிய வைக்க நாம் கையில் எடுத்த கோரிக்கை தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவது தான்.
இந்த கோரிக்கையே பல தமிழர்களுக்கு என்னவென்று புரியவில்லை. ஏன் தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும் என பல தமிழர்கள் கேள்வி கேட்கும் நிலை தான் இன்றும் நிலவுகிறது. இந்நிலையில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தான் தமிழ்நாட்டில் எடுபடும் . குறைந்த அளவு வரவேற்பு பெரும். இங்கு தமிழர்களின் பலத்தை திரட்ட இம்முயற்சி பலன் தரும். ஆனால் எல்லா மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை தொடக்கக் காலத்தில் பயன்தராது. காரணம் அதற்கான முன்னெடுப்பு அந்தந்த மாநிலங்களின் சூடு பிடிக்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட இதே கோரிக்கை வலுப்பெற வேண்டும்.
அது வலுப்பெறாமல் நாம் மட்டும் அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று கோரிக்கை வைப்பது தமிழகத்தில் கூட அந்த கருத்து எடுபடாது. இது தான் அரசியல் யதார்த்தம். இதை புரிந்து கொண்டே தமிழை முன்னிறுத்தி கோரிக்கை வைத்தோம். இது நாம் புதிதாக வைத்த கோரிக்கை அல்ல . காயிதே மில்லத் 50 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை தான். உண்மையில் தமிழ் மொழிக்கு மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாவதற்கு அனைத்து தகுதியும் உண்டு நிரூபித்தவர் காயிதே மில்லத் அவர்கள். இப்போது நாம் அதே கோரிக்கையை வைத்துள்ளோம்.
எப்போது மற்ற மாநிலங்கள் எல்லாம் இதே போல் தங்கள் மொழியுரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்களோ, அப்போதே நாம் அனைத்து தேசிய இனங்களையும் இணைத்து மாபெரும் இந்தி எதிர்ப்பு மற்றும் மாநில மொழி ஆட்சி மொழி மாநாடும் நடத்தலாம். அது வரை நாம் தமிழ் மொழியை தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் மற்ற தேசிய இனங்களையும் போராடத் தூண்டும். எல்லா இனங்களும் தன்னெழுச்சி பெற்றால், அடுத்த கணமே இது நாடு தழுவிய போராட்டமாக மாறும்.
இதற்கு மேல் அந்த அறிவாளித் தமிழருக்கு நாம் எந்த பதிலும் அளிக்கப் போவதில்லை.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment