
இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவர்கள் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க கேட்டு இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலுக்கு செல்லாத இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று 300 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இன்று கரை திரும்ப வேண்டிய அவர்களில் பலர் வெறும் கையுடனேயே திரும்பினர்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் திரண்டு வந்து படகுகளை சேதப்படுத்தி வலைகளை அறுத்து எறிந்ததாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் 4 படகுகளுடன் 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சிறைபிடிக்கப்பட்ட படகுகள் யாருக்கு சொந்தமானவை? அதில் இருக்கும் மீனவர்கள் யார்? யார்? என்பது அனைத்து படகுகளும் கரை திரும்பிய பிறகே முழுமையாக தெரியவரும் என மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு பின்பு இலங்கை கடற்படையினர் பிடித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 34 பேர் விடுதலையாகி இன்று காலை மண்டபம் திரும்பி உள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் இந்த கைது சம்பவத்தை முடிவுக்கு கொண்டுவர சச்சத்தீவை மீட்பதுதான் சரியான வழி என்றால் அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு உடனடியாக இறங்க வேண்டும் என மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-ஈழ மகான் தமிழ்
No comments:
Post a Comment